முருகனிஸமே ஆதி ஹீரோயிஸம்! - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » முருகனிஸமே ஆதி ஹீரோயிஸம்!

முருகனிஸமே ஆதி ஹீரோயிஸம்!

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:20


அடர்ந்த காடு. அதன் நடுவே ஒழுங்கில்லாத ஒரு பாதை மேடும் பள்ளமுமாகச் சென்றது. அதில் ஓர் உருவம் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தது... அல்ல, ஓர் உருவம் அல்ல, இரண்டு உருவங்கள். ஒருவருடைய தோள்மேல் இன்னொருவர் ஏறி உட்கார்ந்திருக்கிறார். ஏன்?

அடடா, மேலே உட்கார்ந்திருப்பவருக்குக் கால் ஊனம். அவரால் நடக்க முடியாது. ஆகவே, கீழே இருப்பவர் அவரை ஆதரவாகத் தூக்கிச் செல்கிறார். இன்னும் உற்றுக் கவனித்தால் மற்றொரு விநோதமான காட்சி தெரிகிறது. நடப்பவருக்கு அவருடைய தோளில் உட்கார்ந்திருப்பவர் வழி சொல்லிக்கொண்டே போகிறாரே! ஏன்? காரணம், நடப்பவருக்குக் கண் தெரியாது. ஆகவே, அவர் வழி சொல்லச் சொல்ல, அவரைச் சுமந்தபடி இவர் நடக்கிறார். இப்படியாக இருவரும் மிகச் சிரமப்பட்டுப் பாதையைக் கடக்கிறார்கள்.

‘‘அச்சச்சோ’’ என்று பரிதாபப்படாதீர்கள். அவர்களுக்குப் பிடிக்காது. தன்னம்பிக்கையுடன் வாழ விரும்பும் இரட்டைப் புலவர்கள் இவர்கள். ஒருவர் பெயர் முதுசூரியர், இன்னொருவர் பெயர் இளஞ்சூரியர். இருவரும் ஒன்றாகப் பிறந்த அண்ணன், தம்பி என்று சிலர் சொல்கிறார்கள், ‘நெருங்கிய உறவினர்கள் மட்டுமே’ என்று சிலர் மறுக்கிறார்கள். உண்மையில் அவர்கள் சகோதரர்களோ, இல்லையோ, மனத்தளவில் அவர்களிடையே அப்படி ஓர் ஒற்றுமை. நான்கு வரிப் பாடல் ஒன்றை, இவர் இரண்டு வரி பாட்டைப் பாடியவுடன், அடுத்தவர் மீதி இரண்டு வரிகளைக் கச்சிதமாகப் பாடி முடிப்பாராம்!

பாட்டில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் ஒருவர் தேவையை அடுத்தவர் பூர்த்தி செய்தே வாழ்ந்தார்கள். ஒருவர் மற்றவருக்குக் காலாகவும் இவர் அவருக்குக் கண்ணாகவும் மாறினார்கள், எங்கும் எப்போதும் ஒன்றாகவே திரிந்தார்கள். பல மன்னர்கள், வள்ளல்களைச் சந்தித்து அவர்களை விதவிதமாகப் புகழ்ந்து பாடினார்கள். தங்களது நிலைமையைச் சொல்லாமல் சொல்லி உதவி கேட்டார்கள். என்ன பிரயோஜனம்? அத்தனை புலமை இருந்தும் அவர்களை மதிப்போர் இல்லை. அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டார்கள். வாழ்க்கை மிகுந்த சிரமத்தில் ஓடியது.

ஒருநாள், அவர்கள் இப்படி ஒரு காட்டுப்பாதையில் நடந்து கொண்டிருந்த நேரம். மேலே உட்கார்ந்திருந்தவர் சொன்ன வழியைக் கீழே நடந்தவர் கவனிக்காமல் எங்கேயோ கால் வைக்க, இருவரும் பொத்தென்று விழுந்தார்கள். உடம்பெல்லாம் அடி பட்டு நல்ல வலி.

அப்போது, வேதனையோடு ஒருவர் பாடினார்:
குன்றும் குழியும் குறுகி வழி நடந்து
சென்று திரிவது என்றும் தீராதோ?

‘ஒவ்வொரு நாளும் காடுகளிலும் மலைகளிலும் கஷ்டப்பட்டு நடக்கிறோம். இந்த அலைச்சல் இன்னும் எத்தனை நாள் தொடரும்? நமக்கு விடிவு காலம் எப்போ?’ அடுத்தவர் பதில் சொன்னார்:

கொடாதவனைக் கோ என்றும் கா என்றும் சொன்னால்
இடாதோ நமக்கு இவ் இடர்! ‘நமக்கு எப்படி அய்யா விடிவுகாலம் வரும்? கஷ்டப்பட்டுப் பாடுகிறவனுக்கு எதையும் தராத கஞ்சப் பயல்களையெல்லாம் தலைவனேன்னு புகழறோம், எங்களைக் காப்பாத்தறவனேன்னு பாடறோம், இப்படித் தினம் தினம் பொய் சொல்ற நமக்கு எப்படிக் கஷ்டம் தீரும்?’

இரட்டைப் புலவர்களின் மன வருத்தத்தில் நியாயம் உண்டு. அவர்கள் கேட்டதைத் தரக்கூடிய நிஜமான வள்ளல்கள் யாரும் அப்போது இல்லை. ஆகவே, அகப்பட்டவர்களையெல்லாம் பொய்யாகப் புகழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் யாராவது தங்களுக்கு உதவி செய்யமாட்டார்களா என்று ஏங்கினார்கள். அப்படியானால், அவர்கள் என்னதான் செய்திருக்கவேண்டும்? யாரைப் பாடியிருக்கவேண்டும்? இந்தப் பாடல் சொல்லும் மறைமுகமான கருத்து என்ன? இந்தக் கேள்விக்குப் பதிலாக, நம்மாழ்வாரின் அற்புதமான பாடல் ஒன்று:

உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன், அவன்!
மயர்வு அற மதிநலம் அருளினன் எவன், அவன்!
அயர்வு உறும் அமரர்கள் அதிபதி எவன், அவன்!
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே!


‘இந்த உலகில் உள்ள உயர்வான விஷயங்களை யெல்லாம்விட உயர்வானவன் எவன்? நம்முடைய அறியாமை இருளை அகற்றி, அறிவு என்ற முழு நிலவைப் பிரகாசிக்கச் செய்கிறவன் எவன்? தேவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களுடைய தலைவனாகத் திகழ்கிறவன் எவன்? அந்தக் கடவுளின் ஒளிமயமான திருவடிகளைத் தொழுது எழுந்தால், நம் துயரங்கள் அனைத்தும் நீங்கும். அதைமட்டுமே நீ செய், மனமே!’ இந்தப் பூமியில் எத்தனை வள்ளல்கள் இருந்தால் என்ன? அவர்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறவன் இறைவன். இவர்களைப் பாடிப் பலன் பெறுவதைவிட, நேரடியாக அவனைப் பாடினால் எல்லாம் குறைவின்றிக் கிடைக்கும்!

‘ஹீரோயிஸம்!’

திரைப்பட ரசிகர்களிடையே சர்வசாதாரணமாகப் புழங்கும் வார்த்தை இது. பல நடிகர்கள், இயக்குனர்கள் இந்த சூட்சுமத்தை மூலதனமாக வைத்துதான் தங்களது படங்களை எடுக்கிறார்கள். ‘ஹீரோயிஸம்’ என்பதன் அர்த்தம், கதையின் நாயகன் எப்பேர்ப்பட்டவன் என்பதை அழுத்தமாகச் சொல்வது. ரசிகர்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு அவனை அதில் உட்கார வைப்பது. இதற்காக நம் படங்களில் பலவிதமான காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஹீரோவின் வீரத்தை நிரூபிப்பதற்கு நாலு சண்டைக் காட்சிகள், அவருடைய இளமையை மையப்படுத்தி, பாடல்கள் கொண்ட காதல் காட்சிகள், அவர் பண்பானவர் என்பதைச் சொல்லுவதற்காகச் சில உருக்கமான காட்சிகள், நாலு பேர் அவரைப் புகழ்ந்து பேசுவதுபோன்ற வசனங்கள் என்று படிப்படியாக அந்தக் கதாநாயகனை நம் மனத்தில் அழுந்தப் பதிக்கிறார்கள்.

இந்த டெக்னிக் உண்மையில் எங்கிருந்து வந்தது தெரியுமா? நம்முடைய பக்தி இலக்கியங்களில் இருந்துதான்! அங்கே கடவுளின் பன்முகத் தன்மையைச் சொல்லி அவர்களது உயர்வைக் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உத்தி, இப்போது சினிமா நாயகர்களுக்கும் பிரமாதமாகப் பயன்படுகிறது.
நம்பமுடியவில்லையா? இதை நிரூபிப்பதற்கு ஒரே ஒரு சாம்பிள் பாட்டு. அருணகிரிநாதர் எழுதிய ‘திருப்புகழ்’ நூலில் இடம்பெற்ற இந்தப் பாடல், பல திரைப்படங்கள், இசைத் தட்டுகளில் வெளியாகி மிகப் பிரபலமானதும்கூட!

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே,
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே,
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம்
ஒன்றே,
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம்
ஒன்றே,
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,
வள்ளியை மணம் புணர வந்த முகம்
ஒன்றே,
ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல்
வேண்டும்,
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!


முருகனுக்கு ஆறு முகம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அந்த ஆறு முகங்களை அருணகிரிநாதர் எப்படி விவரிக்கிறார் என்பதில்தான் விஷயமே இருக்கிறது: முதல் காட்சி, முருகன் மயிலின் மீது ஏறி விளையாடுகிறான். குறும்பான முகம். இரண்டாவது காட்சி, தந்தையாகிய சிவபெருமானுடன் ஞானமொழி பேசுகிறான். இது அவனுடைய அறிவையும், சிந்தனைத் திறனையும் காண்பிக்கிறது. மூன்றாவது காட்சியில், பல அடியார்கள் முருகனைத் தேடி வந்து வணங்குகிறார்கள். தங்களது பிரச்னைகளைச் சொல்லி ஆறுதலும் தீர்வும் வேண்டி நிற்கிறார்கள். உடனடியாக, முருகன் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துவைக்கிறான்.

இது அவனது பண்பை, அடுத்தவர்களுக்காக உருகும் மனநிலையை, அவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையைக் காண்பிக்கும் முகம். நான்காவது காட்சியில், ஒரு மிகப் பெரிய மலையை வீழ்த்துகிறான் முருகன். பின்னர் அங்கே கம்பீரமாக வேல் பிடித்து நிற்கிறான். அடுத்த (ஐந்தாவது) காட்சியில், சூரன், மற்ற பல அரக்கர்கள் அவனை எதிர்த்து வருகிறார்கள். எல்லாரையும் ஜெயிக்கிறான் முருகன். இவை அவனுடைய வீரத்தைக் காண்பிக்கும் முகம்.
ஆறாவது காட்சி, வள்ளித் திருமணம். வேடனாக மாறு வேடத்தில் வந்து, அண்ணன் பிள்ளையாரின் துணையோடு வள்ளியைக் கைப்பிடிக்கிறான். இது முருகனுடைய ரொமான்டிக் முகம்.

கச்சிதமாக ஆறே வரிகள். அதற்குள் ஒரு குறும்பான, தன் வயதுக்கே உரிய குறும்புத்தனம் கூடிய, அதே சமயம் சிந்தனை, வீரம் ஆகியவற்றில் பலமடங்கு உயர்ந்து நிற்கக்கூடிய, எல்லாருக்கும் பிடித்த ஒரு ஹீரோவை அறிமுகப்படுத்தியாகிவிட்டது.

அருணகிரிநாதரின் ‘முருகனிஸம்’ எப்படி?
புதுமைக்கும் புதுமையானவன்
‘‘அந்தக் காலத்துல நாங்கள்லாம்...’’ என்று சில பெரியவர்கள் பேச ஆரம்பித்தால் போதும், இளசுகள் காதைப் பொத்திக்கொண்டு ஓடிவிடுவார்கள். பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி ‘‘போதுமய்யா உங்க பழம் பெருமை’’ என்று அவர்களைக் கிண்டலடிப்பார்கள். அதேபோல், இன்றைய இளைஞர்களின் நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், பேச்சுமுறை எதுவும் பெரியவர்களுக்குப் பிடிப்பதில்லை, ‘‘நாடு எங்கே போய்கிட்டிருக்கு?’’ என்று வேதனையோடு சொல்லிப் புலம்புவார்கள். ஆனால் சிலர், இந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவில் சந்தோஷமாக அமர்ந்திருப்பார்கள்.

அவர்களால் ‘பழைய’ பார்ட்டிகளிடம் அந்தக் காலச் செய்திகளைப் பேசி விவாதிக்கவும் முடியும், ‘இளைய’ பார்ட்டிகளிடம் ‘‘என்னா மச்சி, சௌக்யமா?’’ என்று கொஞ்சிக் குலாவவும் முடியும். இது ஓர் அபூர்வமான குணம். திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகர், சிவபெருமானை அப்படி ஒரு வாக்கியத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார். அழகான அந்தப் பாடல்:

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்,
உன் அடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம், அன்னவரே எம் கணவர் ஆவார், அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்!
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இரண்டின் களம் ஒன்றுதான், பாடப்படும் கடவுள்தான் வேறு. கோதை நாச்சியாராகிய ஆண்டாளும் அவளது தோழியரும் கண்ணனை எண்ணிப் பாவை நோன்பு இருக்கிறார்கள், மாணிக்கவாசகர் காண்பிக்கும் பெண்கள், சிவபெருமானைப் போற்றி அதே நோன்பு நோற்கிறார்கள். இந்தப் பெண்கள் எல்லாரும் இளம் வயதினர். குறும்பும் வேடிக்கையுமாகப் பேசிச் சிரிக்கிற விளையாட்டுத் தோழிகள். ஆனால் கடவுள் பணி என்று வந்துவிட்டால், அனைவரும் தீவிரமாகி விடுகிறார்கள், ‘‘நாளைக்குக் காலையில சீக்கிரமா எழுந்து குளிச்சுக் கோயிலுக்குப் போகணும்’’ என்று திட்டமிடுகிறார்கள். பாவை நோன்புக்காகச் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பட்டியல் போட்டுத் தயாராகிறார்கள்.

மறுநாள் காலை, சில பெண்கள் சொன்னபடி சீக்கிரம் எழுந்துவிட்டார்கள். மற்றவர்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவர்களை எழுப்பிப் பாவை நோன்புக்காக அழைத்துச் செல்வதுதான் திருவெம்பாவையின் முதல் பகுதி. அந்த வரிசையில், ஒன்பதாவதாக வரும் பாட்டு இது. ‘உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் முன்னதாகப் பிறந்த பழம்பொருளே’ என்று பரம்பொருளை வர்ணித்துப் பாடுகிறார்கள் பெண்கள். அப்படியானால், ஆண்டவன் அரதப் பழசா? இந்தக் காலத்துக்குச் சரிப்பட மாட்டானா?

அடுத்த வரியிலேயே அதற்கும் பதில் சொல்லிவிடுகிறார் மாணிக்கவாசகர். ‘பின்னர் வந்த புதுமைகள் அத்தனைக்கும் புதுமையாக இருக்கிறவனே!’ அதாவது, ஒரே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு எட்டாத கடந்த காலத்தில், மிகப் பழையதாகவும் நீங்கள் கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு வருங்காலத்தில், மிக மிகப் புதியதாகவும் தோன்றுகிற அதிசயத்தை அவன் நிகழ்த்துகிறான். சிவனை நன்றாகப் புகழ்ந்தாயிற்று. சரி, உங்களுக்கு என்ன வேண்டும்? உன்னைத் தலைவனாகப் பெற்றிருக்கிறோம், எங்களுக்கு என்ன குறை? உன்னுடைய பெயரைச் சொல்லிக்கொண்டு வரும் சிவனடியார்களின் காலில் விழுந்து வணங்குவோம். உனக்குத் தரும் அதே மரியாதையை அவர்களுக்கும் தருவோம்.

அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வோம். அதுமட்டுமில்லை, நாளைக்கு எங்களுக்குத் திருமணம் ஆகுமல்லவா? அப்போது, உன்னுடைய பெயரைப் பாடும் பக்தர்களில் ஒருவரைதான் எங்களுடைய கணவராகத் தேர்ந்தெடுப்போம். அவர்களுடைய ஆன்மிகப் பணிகளில் துணை நிற்போம். ஆனால் இதெல்லாம், எங்களுடைய ஆசை மட்டும்தான். இவற்றை நல்லபடியாக நிறைவேற்றி வைக்க வேண்டியது, எங்களுடைய தலைவனாகிய உன்னுடைய பொறுப்பு. தென்னாடுடைய சிவனே, இந்த ஒரு வரத்தை மட்டும் நீ கொடுத்துவிட்டால் போதும், அதன்பிறகு எங்களுக்குக் குறையொன்றும் இல்லை கங்கை மணாளா!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்